வீரப்பன் நண்பர்களது மறுசீரமைப்பு மனு தள்ளுபடி: இன்று தூக்கு ?
சந்தன கடத்தல் வீரப்பன் நண்பர்கள், நான்கு பேரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இதனால் இந்த நான்கு பேருக்கும், இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக வெளியான தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த, 1980 மற்றும் 90 களில், தமிழகம், கர்நாடகா வனப் பகுதியில், சந்தன கடத்தல் வீரப்பனின் ஆதிக்கம் இருந்தது. அடர்ந்த வனப் பகுதிகளில், சந்தன மரங்களை வெட்டி கடத்தியும்; யானைகளை கொன்று, அவற்றின் தந்தங்களை திருடியும், வீரப்பனும், அவனது கூட்டாளிகளும், அட்டூழியம் செய்து வந்தனர்.
பல ஆண்டுகளாக, இரு மாநில பொலிசாருக்கும் டிமிக்கி கொடுத்து வந்த, வீரப்பன், 2004ம் ஆண்டு, தமிழக போலீசாரால், சுட்டுக் கொல்லப்பட்டான். வீரப்பன் உயிருடன் இருந்தபோது, 1993ம் ஆண்டு, 22 பொலிசாரை, கண்ணிவெடி மூலம் படுகொலை செய்தான்.
இந்த குற்றத்தில், வீரப்பன் கூட்டாளிகளான, ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேருக்கு, உயர் நீதிமன்றில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தங்களின் தண்டனையை குறைக்கும்படி, நான்கு பேரும், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். இவர்களின் கருணை மனுக்களை, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, கடந்த, 13ம் திகதி, நிராகரித்தார். இந்த நான்கு பேரும், தற்போது, கர்நாடகா மாநிலம், பெல்காம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை, சிறை அதிகாரிகள் செய்து வந்தனர். இந்நிலையில், இந்த நான்கு பேர் சார்பிலும், தூக்கு தண்டனையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உயர் நீதிமன்றில், தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.இதற்கிடையே, வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கும், இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக, வெளியான தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating