தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் வரும் 28ம் திகதி பிரித்தானியா பயணம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் எதிர்வரும் 28ம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அனைத்துலக தமிழர் பேரவையின் அழைப்பின் பேரில் இவர்கள் இருவரும் பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கின்றனர். அங்கு இவர்கள் பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.எதிர்வரும் 26ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றினைக் கொண்டுவரவுள்ளது. இதேபோல் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கடுமையானதாக அமையவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. இதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலான சந்திப்புக்களிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சுமந்திரன் எம்.பியும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் இருவரும் நான்கு நாட்கள் வரையில் பிரித்தானியாவில் தங்கியிருப்பார்கள் என தெரியவருகின்றது.
Average Rating