பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து – 111 பேர் மீது வழக்கு
சூர்யநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பி.ஜே.குரியன் பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்துக்களை பதிவுசெய்து (கமண்ட்) அதனைப் பகிர்ந்து கொண்ட (ஷேர்) 111 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது சூர்யநெல்லி வழக்கு.
இந்த வழக்கில் பிரபல கேரள காங்கிரஸ் தலைவரும் ராஜ்ய சபா துணைத் தலைவருமான பி.ஜே.குரியனை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகி காங்கிரசுக்கு பெரும் தலையிடியை உண்டாக்கியுள்ளன.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக்கில் ஏராளமானோர் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளதோடு, ஏராளமானோர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இது தொடர்பாக கேரளா மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா புகாரொன்றை அளித்தார்.
இதனடிப்படையில் கேரளா பொலிஸ் ஃபேஸ்புக்கில் கருத்துக்களை பதிவு செய்த, ஒருவர் மீதும் அதை பகிர்ந்தகொண்டமேலும் 110பேர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 ஏ-வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா சைபர் பொலிஸ் இதுவரை இந்த புகார் தொடர்பாக பல ஃபேஸ்புக் பயனாளிகளிடம் விசாரணை செய்துள்ளதாகவும், இதுவரை பி.ஜே.குரியன் தொடர்பான அவதூறு செய்தியை 2000த்துக்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த வழக்கின் விசாரணை அதிகாரி சஜி லுகோஸ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மாநில முதல்வரிடம் புகார் அளித்த பிந்து கிருஷ்ணாவிடம் கேட்டபோது அந்த கமெண்ட்டுகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ,எந்த ஒரு பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அவை மோசமாக இருந்தன. பி.ஜே.குரியனுக்கு ஆதரவாக செயல்படும்படி எனது கட்சி கேட்டுக்கொண்டதால் நான் இந்த நடவடிக்கையில் இறங்கினேன் என்றார்.
Average Rating