மனைவியை சிகரெட்டால் சுட்ட கணவனுக்கு அடிதடி அபிஷேகம் செய்த பெண்கள்… கோர்ட்டில் பரபரப்பு.
சிகரெட்டால் சுட்டு மனைவியை கொடூரமாக சித்ரவதை செய்த வழக்கில் கைதான கணவனை தானே நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த போது 50 பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்வாவை சேர்ந்தவர் ரூபேஷ் ஜெய ராம் தண்டேல். இவரது மனைவி பானுமதி. 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உண்டு.
ரூபேஷ் தனது மனைவியை கடித்தும், சிகரெட்டால் சுட்டும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 மாதங்களுக்கு முன்பு பானுமதி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இரண்டு மாதங்களுக்கு முன் பெரியவர்கள் சமாதானம் பேசினர். எனினும் பானுமதியை கணவன் வீட்டுக்கு அனுப்ப அவரது தந்தை சம்மதிக்கவில்லை.
ஒழுங்காக குடும்பம் நடத்துவேன் என்று ரூபேஷ் கூறியதால் அவருடன் பானுமதியை அனுப்பி வைத்தனர். வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏறிய கதையாக ரூபேஷ் மீண்டும் சித்ரவதை செய்தார். சிகரெட்டால் சுட்டும், மிருகத்தை போல மனைவி உடலில் 50 இடங்களில் கடித்தார். இரும்பு கம்பியாலும் அடித்தார். பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவி சித்ரவதை செய்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பானுமதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்வா போலீசில் பானுமதி கொடுத்த புகாரின் பேரில் ரூபேஷ் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் தானே மாவட்ட நீதிமன்றத்தில் ரூபேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி சுமார் 50 பெண்கள் ரூபேஷை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். ரூபேஷுடன் வந்த போலீஸ் அதிகாரியும் தாக்கப்பட்டார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்ட பின்னர் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளி ஒருவனை பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating