ஜப்பானை வீழ்த்தியது ஆஸ்ட்ரேலியா 3-1
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகளுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்ற ஆஸ்ட்ரேலிய அணி கடைசி 7 நிமிடத்தில் அடுத்தடுத்து 3 கோல்களைப் போட்டு ஆசிய சாம்பியன் ஜப்பானை வீழ்த்தியது!
எஃப் பிரிவில் இன்று நடந்த முதல் போட்டியில், முதல் 15 நிமிடங்கள் ஆஸ்ட்ரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஜப்பானின் கோலை நோக்கி அது தொடுத்த தாக்குதல்களை ஜப்பான் கோலி திறமையாக தடுத்துக் காத்தார்.
அதன்பிறகு ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் நக்காமூரா டி-க்கு வெளியே இருந்து அடித்த பந்தை ஆஸ்ட்ரேலிய கோலி எம்பி பிடிக்க முயன்றார். அதே நேரத்தில் மேலே எம்பி அதனை தலையால் முட்டி கோலுக்குள் தள்ள முயன்றார் மற்றொரு ஜப்பான் வீரரால் கோலி தள்ளப்பட பந்து கோலுக்குள் புகுந்தது.
அதன்பிறகு ஆஸ்ட்ரேலிய அணி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. இடைவேளைக்குப் பிறகும் ஜப்பானின் தாக்குதலே அதிகம் இருந்தது. ஆனால் பல வாய்ப்புகளை அவர்கள் கோலாக்கத் தவறினர்.
ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது, இடது மூலையில் இருந்து தூக்கியெறியப்பட்ட பந்தை டி-க்குள் இருந்த ஆஸ்ட்ரேலிய வீரர்கள் கோலுக்குள் அடிக்க முயற்சிக்க, அந்தக் குழப்படியில் தனது காலுக்கு வந்த பந்தை கோலுக்குள் அடித்தார் டிம் கேஹில். இரு அணிகளும் சமநிலைக்கு வந்தன.
ஆட்டம் முடிவை நெருங்கியதால் ஜப்பான் அணி சுறுசுறுப்பாக ஆடியது. அதற்கு ஒரு கோல் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் நழுவ விட்டது. அடுத்த நிமிடமே டி-க்கு வெளியே கிடைத்த பந்தை கோலை நோக்கி அடித்தார் கேஹில். பந்து கோல் கம்பத்தில் பட்டு கோலுக்குள் புகுந்தது.
ஆட்டம் காய நேரத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஜான் அலாய்ஸி கோலுக்கு அருகில் சென்று அருமையாக பந்தை அடித்தார்.
7 நிமிடங்களில் 3 கோல்களை வாங்கி பரிதாபமாக தோற்றது ஜப்பான் அணி. நாளை இரவு நடைபெறும் போட்டியில் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற இரண்டு அணிகளான பிரேசிலும், குரோஷியாவும் மோதுகின்றன.