கோப்பாயில் பாதுகாப்புத் தரப்பினர் அட்டகாசம்
யாழ். கோப்பாய் சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சாரதியான தென்பகுதியைச் சேர்ந்தவர் வாகனத்தை எடுக்க முற்பட்டபோது அங்கு கூடிய பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த சீருடையினர் எதிர்ப்புத் தெரிவித்த மக்களை கடுமையாகத் தாக்கினர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தாக்கப்பட்ட ஒருவரை வாக்குமூலம் பெற வேண்டும் என கூறிப் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேரந்த நீர்வேலியைச் சொந்த இடமாகக் கொண்ட தங்கராஜா தயாபரன் (வயது45), தயாபரன் குகராணி (வயது45), தயாபரன் தயானிகா (வயது20), தயாபரன் சுவானிகா (வயது18) ஆகியோர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தயாபரன் குகராணி அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். நீர்வேலியைச் சேர்ந்த தயாபரன் தனது மனைவி மற்றும் மகள்மார் இருவருடன் தனது ஓட்டோவில் யாழ்ப்பாணத்தில் இருந்து நீர்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
கோப்பாய் சந்தியில் ஓட்டோ பயணித்துக் கொண்டிருந்த போது கைதடி மானிப்பாய் வீதியூடாக கைதடி நோக்கி வந்த ‘ இன்ரர்கூலர்’ வாகனம் ஒன்று சந்தியில் பிரதான வீதியைக் குறுக்கறுத்து வேகமாக செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றது. இன்ரர்கூலர் வாகனத்தின் சாரதி தென்பகுதியைச் சேர்ந்தவர். அந்த வாகனத்தில் சீனப் பிரஜைகளும் பயணித்தனர். விபத்தில் ஓட்டோ தடம்புரண்டது. அதில் ஓட்டோவில் பயணித்த நால்வரும் காயமடைந்தனர். விபத்தையடுத்து தென்பகுதியைச் சேர்ந்த சாரதி வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டார். அதற்கு அங்கு கூடிய ஏராளமான மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பொலிஸார் வந்த பின்னரே வாகனத்தை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் எனக் கூறினர்.
இதன் போது அங்கு திடீரென வந்திறங்கிய இராணுவத்தினர் வாகனத்தைத் தடுத்து வைத்திருந்த பொதுமக்களை கண்டபடி தாக்கியதாக மக்கள் தெரிவித்தனர். படையினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபர் ஒருவரை வாக்குமூலம் பெற வேண்டும் என்று கூறி சம்பவ இடத்தில் இருந்து கோப்பாய் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வாகன சாரதியை கைது செய்துள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் உறுதிப்படுத்தினர். விபத்துக்குள்ளான ஓட்டோவும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Average Rating