மியன்மாரில் 50 ஆண்டுகளுக்கு பின் தனியார் நாளிதழ்
மியன்மார் நாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தனியார் நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அந்நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளிதழ்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
1964-ஆம் ஆண்டு நீவின் என்பவரது சர்வாதிகார ஆட்சியில் தனிநபர்களின் வர்த்தகம் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இதில் பத்திரிகைகளும் அடக்கம். அரசாங்கமே நாளிதழ்களை நடத்தி வந்தது. நூற்றுக்கணக்கான வார இதழ்கள் விளையாட்டு, பொழுதுபோக்கு, சுகாதாரம் போன்றவற்றை மையமாக வைத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக மியன்மாரில் ஜனநாயக நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தமது கிளையை யாங்கூனில் அமைத்தது. இதன் பின்னர் நேற்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் தனியார் நாளிதழ்கள் வெளியிட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
1960களுக்குப் பின் பிறந்தவர்களுக்கு தனியார் நாளிதழ்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தால் அவை விறுவிறு வென விற்றுத் தீர்ந்திருக்கின்றன.
அந்நாட்டின் ஆளும் கட்சி சார்பில் த யூனியன், பிரபல த வாய்ஸ் வார இதழின் சார்பில் ெவாய்ஸ் டெய்லி, த ஸ்டாண்டர்ட் டைம் டெய்லி, கோல்டன் ஃப்ரெஸ் லேண்ட் ஆகிய 4 நாளிதழ்கள் நேற்று வெளியாகி இருக்கின்றன.
கோல்டன் ஃப்ரெஸ் லேண்ட் நாளிதழ் 80 ஆயிரம் பிரதிகளை அச்சிட்டதாகவும் அவை அனைத்துமே விற்றுத் தீர்ந்ததால் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன் என்று அதன் தலைமை செய்தி ஆசிரியரான 81 வயது கின் மெளங் லாய் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இவர்தான் பர்மிய மொழி மூத்த பத்திரிகையாளராக கருதப்படுகிறவர். 1964ஆம் ஆண்டு மோக்யோ என்ற பர்மிய நாளிதழில் பணியாற்றியிருந்தார்.. இந்த அரை நூற்றாண்டு காலமாக இந்த ஒரு தருணத்துக்காகவே தாம் காத்திருந்தேன் என்றார் அவர். மேலும் பல நிறுவனங்களும் நாளிதழ்களை வெளியிட முன்வந்திருக்கின்றன.
Average Rating