உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு புளொட் கண்டனம்
கிளிநொச்சி கரடிபோக்குச் சந்தியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் இன்று அதிகாலை (03.04.2013) இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமையையும், பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக சென்றிருந்த இரு பணியாளர்கள் மற்றும் உதயன் பத்திரிகை கிளை முகாமையாளர் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-யினராகிய (புளொட்) நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். உதயன் பத்திரிகையின் செய்திகளையும் கருத்துக்களையும் சகித்துக்கொள்ள முடியாத சக்தியொன்றே உதயனின் பணியை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட இத் தாக்குதலின் பின்னணியில் இருப்பது புலனாகின்றது. வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் ஜனநாயகம் பேணப்படுவதாக அரசாங்கம் தொடர்ந்து கூறிவரும் நிலையில்தான் உதயன் பத்திரிகை அலுவலகம்மீதும் அதன் கிளிநொச்சி முகாமையாளர் மற்றும் பணியாளர்கள்மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் இனங்கண்டு அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
Average Rating