அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சடலம் திருட்டு
இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த சடலமொன்று திருடப்பட்ட சம்பவமொன்று நொச்சியாகவில் இடம்பெற்றுள்ளது. ஆர்.வி. டிங்கிரி என்ற 87 வயதான பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது மகளொருவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது மகள் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றமையால் மருமகனின் பராமரிப்பிலேயே டிங்கிரி இருந்துள்ளார்.
இந்நிலையில் டிங்கிரியை பார்க்கும் பொருட்டு அவர் வசித்து வரும் வீட்டுக்குச் சென்ற அவரது மகன் தாயார் நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மகனது வீட்டில் இருந்த டிங்கிரி 3 நாட்களில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து யாருடைய வீட்டில் அவரின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக வைப்பது என்பது தொடர்பில் மருமகன் மற்றும் அப்பெண்ணின் மகனிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இறுதியாக முதலில் பூதவுடலை மகனது வீட்டிலும் பின்னர் இறுதி கிரியைகளுக்காக மருமகனது வீட்டில் வைப்பதெனவும் முடிவாகியுள்ளது. இந்நிலையில் டிங்கிரியின் மகன் தனது வீட்டிலிருந்த தாயின் பூதவுடலை காணவில்லையென பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பொலிஸாரின் விசாரணையில் டிங்கிரியின் பூதவுடலை அவரது மருமகனே திருடிச் சென்று தனது வீட்டில் வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிந்த வேளையில் யாரும் அறியாவண்ணம் பூதவுடலை எடுத்துச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் மகன் மற்றும் மருமகனுக்கிடையிலான பிணக்கு தீர்க்கப்பட்டு டிங்கிரியின் பூதவுடல் மருமகனின் வீட்டிலேயே வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating