பிள்ளையானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: மட்டு.சுதந்திரக் கட்சி அமைப்பாளர்
முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள தமது குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டை பலாத்காரமான முறையில் பயன்படுத்தி வருவது தொடர்பாகவே முன்னாள் முதலமைச்சருக்கு எதிராகத் தாம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனது பெற்றோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் 1989ல் தாம் நாட்டை விட்டு வெளியேறிய போது விடுதலைப் புலிகள் இந்த வீட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டனர் எனவும், இந்த வேளையில் சுமார் 6 ஆயிரம் புத்தகங்களும், சில பனை ஓலையிலான சுவடிகளும் தனது தந்தையினால் இந்த வீட்டிலுள்ள அவரது நூலகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவை யாவும் விடுதலைப் புலிகளால் எரியூட்டப் பட்டதாகவும் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
பின்னர் இந்த வீட்டைப் பொறுப்பேற்றுக் கொண்ட இராணுவத்தினர் 2007ம் ஆண்டு அதனை சந்திரகாந்தனிடம் ஒப்படைத்தனர். தற்போது பல தடவைகள் கேட்ட போதிலும் சந்திரகாந்தன் இந்த வீட்டை விட்டு வெளியேற மறுப்புத் தெரிவித்து வருகின்றார். இராணுவத்தினர் இதில் எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இது எமது குடும்பத்துக்குச் சொந்தமான வீடு என்பது அனைவருக்கும் தெரியும். இதனை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன என்றும் அருண் தம்பிமுத்து மேலும் தெரிவித்தார்.
சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாயகமான பி.பிரசாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், அருண் தம்பிமுத்து இந்த விடயம் தொடர்பாகத் தமது கட்சியைச் சேர்ந்த எவரிடமும் பேசவில்லை என்றும், சந்திரகாந்தனுடன் அவர் உரையாடுவதன் மூலமாக சுமுகமானதொரு தீர்வு கிடைக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating