சினிமா இயக்குனர், சித்தி கொடுமை நடிகை அஞ்சலி கண்ணீர் பேட்டி: ஐதராபாத்தில் திடீர் தஞ்சம் (VIDEO)
பட இயக்குனர் களஞ்சியமும், எனது சித்தியும் என்னை கொடுமை படுத்துகின்றனர். கொலை செய்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன் என்று கதறியபடி கூறினார் அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடிதெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி. இவர் தனது தாயின் சகோதரியான பாரதிதேவியுடன் தங்கி இருந்தார். ‘கருங்காலி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய டைரக்டர் களஞ்சியம் அஞ்சலியுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். இந்நிலையில் களஞ்சியம், சித்தி பாரதிதேவி மீது இன்று சரமாரியாக குற்றம் சுமத்தினார் அஞ்சலி. இது பற்றி அஞ்சலி ஐதராபாத்திலிருந்து தமிழ்முரசு நிருபரிடம் தொலைபேசியில் கூறியதாவது:
சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் இதுநாள்வரை என்னை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சினிமாவில் நான் நடித்து சம்பாதித்த சொத்து முழுவதையும் அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீடு தான் என் பெயரில் உள்ளது. இத்தனைநாள் அவர்களின் கொடுமையை நான் தாங்கிக்கொண்டேன். சமீபகாலமாக அவர்களது கொடுமை எல்லை மீறிவிட்டது. சினிமாவில்தான் நான் பளிச்சென்று சுதந்திரமாக இருப்பதுபோல் தோன்றுகிறேன். வெளியுலகுக்கு என்னை கலர் புல்லாக காட்டிவிட்டு வீட்டுக்கு சென்றதும் சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் என்னை கொடுமை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
கையில் கிடைத்ததை எடுத்து என்னை அடித்தார்கள். என்னை சுதந்திரமாக விடச்சொல்லி கேட்டதும் மிரட்ட தொடங்கிவிட்டார்கள். என்னை கொலை செய்துவிடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. என் அம்மாவையும் அவர்கள் மிரட்டுகின்றனர். நான் சம்பாதித்த சொத்துக்களைகூட அவர்களே எடுத்துக்கொள்ளட்டும். என்னை உயிரோடு விட்டால்போதும். ஐதராபாத்தில் நான் இப்போது இருக்கிறேன். ஆனால் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை சொல்லமாட்டேன். அப்படி சொன்னால் எனக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறேன். விரைவில் களஞ்சியம் மீதும் எனது சித்தி மீதும் போலீசில் புகார் கொடுப்பேன். இவ்வாறு அஞ்சலி கண்ணீர் மல்க கூறினார். இந்த சம்பவத்தால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating