60 வயது மூதாட்டியின் மகனை மீட்டுக் கொடுத்த பழைய சிம் காட்
யுத்தத்தால் தனது உறவுகளையும் இழந்த நிலையில் கைதடி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், தனக்கு அன்பளிப்பாக கிடைத்த கைத்தொலைபேசி மூலம் காணாமல் போன தனது மகனை கண்டு பிடித்துள்ளார். சந்தனம் சூரியபுத்திரி (வயது 60) என்பவர், இறுதி யுத்தத்தின் போது தனது மகன், மகள், மருமக்கள், ஏழு பேரப்பிள்ளைகள் என அனைவரையும் இழந்து விட்டார். மீதமிருந்த ஒரே மகனுடன் வாழ்ந்து வந்த இவர், பின்னர் அந்த மகனும் காணாமல் போய்விட்ட நிலையில் முதியோர் இல்லத்தில் தஞ்ச மடைந்திருந்தார்.
அப்போது தான், குறித்த இல்லத்தில் இருந்த பூமணி (வயது 65) என்னும் மற்றுமோர் மூதாட்டி தன்னிடமிருந்த இரண்டு கைத்தொலைபேசிகளில் ஒன்றை சூரியபுத்திரிக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் தன்னிடமிருந்த பழைய சிம்காட் ஒன்றை அதற்குப் போட்டுத் தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அந்தக் கைத்தொலைபேசிக்குத் திடீரென்று அழைப்பொன்று கிடைத்துள்ளது. தொலைபேசியை எடுத்துக் கதைத்த சூரியபுத்திரி இன்ப அதிர்ச்சியில் திளைத்துப் போனார்.
காரணம் அழைப்பை மேற்கொண்டவர் பல வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த அவரது மகன். பழைய சிம்காட் நம்பருக்குத் தினமும் அழைப்பை மேற்கொள்வதாகவும், ஆனால் அன்று தான் அழைப்புக் கிடைத்ததாகவும் அவர் தாயிடம் கூறியுள்ளார்.
அத்துடன் 21 வயது நிரம்பிய மகன் தமிழகத்தில் நலன்விரும்பி ஒருவரின் உதவியுடன் படித்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் யாழ்ப்பாணம் வந்து தாயாரை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மகனின் வரவுக்காக அந்த வயோதிபத்தாய் முதியோர் இல்லத்தில் காத்துக் கொண்டிருப்பதாக யாழ்.கைதடி முதியோர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating