இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற நால்வர் உட்பட ஐவர் கைது
உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 4 அகதிகளை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் தப்பி செல்ல உதவிய ஒரு அகதியை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் சிவகிரிபட்டி அகதிகள் முகாமை சேர்ந்த ராமர், அவர் மனைவி ராஜேஸ்வர், காங்கேயம் முகாமை சேர்ந்த ஏசுராஜ், பழனி முகாமை சேர்ந்த தயாளினி ஆகிய நால்வரும் இலங்கைக்கு செல்வதற்காக நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த பாம்பன் பொலிஸார் நான்கு பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இலங்கைக்கு செல்ல முயன்றதாக தெரியவந்தது.
மேலும் இந்த நான்கு பேரும் இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்த மண்டபம் முகாமை சேர்ந்த அகதி ராஜசேகரன் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
ராஜசேகரனிடம் இவர்களை ஏன் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார் என்றும், இதுபோல் இன்னும் எத்தனை பேரை இதுவரை அவர் அனுப்பி இருக்கிறார் என்றும், அவரை போல் இன்னும் எத்தனை பேர் இப்படி அகதிகளை தமிழகத்தில் இருந்து அனுப்புகின்றனர் போன்ற கேள்விகளை கேட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் பிடிபட்ட நான்கு அகதிகளையும் அவரவர் முகாமிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகளையும் பொலிஸார் செய்து வருகின்றனர்.
Average Rating