கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளருக்கு விளக்கமறியல்
யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி சிறுவர் இல்ல பொறுப்பதிகாரி குணசீலனையே எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
கைதடி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் 16 பேரில் 12 பேரை காணவில்லை என சிறுவர் இல்லத்தினரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டையடுத்து 12 சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக் குட்படுத்தப்பட்டனர்.
அத்துடன் சிறுவர் இல்ல பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு, யாழ். சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸாரினால் யாழ். சிறுவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்தே சிறுவர் இல்ல பொறுப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட மற்றும் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா? என்பது தொடர்பிலான மருத்துவ சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Average Rating