பூமியதிர்ச்சி இடிபாடுகளுக்கிடையில் மூன்றுமாத குழந்தை மீட்பு
சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள யான் நகரில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் இதுவரையில் 203 பேர் பலியானதுடன் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த 3 வருடங்களில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சி இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் சீன நேரப்படி காலை 8.02 மணிக்கு யான் நகரில் 7.0 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இப்பூமியதிர்ச்சியினால் பலர் தங்களது உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்து அநாதரவான நிலையிலுள்ளனர்.
தற்போது அங்கு 7 ஆயிரத்திற்கும் அதிகமான படைவீரர்களைக் கொண்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 மாதக் குழந்தை ஒன்று நேற்று இடிபாடுகளுக்கு மத்தியிலிருந்து அதிர்ஷ்டவசமான முறையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
அக்குழந்தையின் தாய் பூமியதிர்ச்சியின் போது உயிரிழந்துள்ளார். மேலும் அக்குழந்தை குறித்த மேலதிக தகவல்கள் தெரியாத நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை காயமடைந்த நிலையில் சிசிச்சை பெற்று வரும் பலரின் நிலைமைகள் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating