காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயற்சி
காத்தான்குடி நகர சபை உறுப்பினரொருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸில் இன்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி காத்தான்குடி பிரதேசத்தில் தங்கி கல்வி பயின்று வருகின்றார்.
குறித்த மாணவியை நகர சபை உறுப்பின் தனது காரில் கல்முனை பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்கு இன்று அழைத்துக் சென்றுள்ளார். அங்கிருந்து காத்தான்குடிக்கு திரும்பி வரும்போதே அம்மாணவி மீது பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து காரை விட்டு இறங்கி அந்த மாணவி இது தொடர்பில் பிரதேசவாசிகளிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அந்த மாணவியை பிரதேசவாசிகள் காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் காரியாலயத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தமையினால் அந்த மாணவியை பிரதேசவாசிகள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனையடுத்து குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபரான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது செய்யப்படுவார் என தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating