ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த புலி உறுப்பினர்களுக்கு அமெரிக்க குடியுரிமை
ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என்று கூறப்படும் 11 பேர் நேற்று குடியுரிமை பெற்று அமெரிக்கா சென்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த 11 அகதிகளும் நேற்று அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கு குடியுரிமை பெற்ற குறித்த 11 பேர் உள்ளடங்களாக 44 இலங்கை அகதிகளின் குழு கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழகத்துக்கு அகதிகளாக தப்பிச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தமிழகத்தில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர். எனினும் பயணத்தின் இடையில் அவர்களின் படகு பழுதடைந்த நிலையில், ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு சென்ற கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்ட அவர்கள் அரபு ராச்சியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அரபு ராச்சியம் 1951ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அகதிகள் சாசனத்தில் கைச்சாத்திடாத நிலையில், அவர்களுக்கு அங்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்படாதிருந்தது. எனினும் ஐக்கிய நாடுகள் அகதிகள் பேரவையின் கோரிக்கை அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வெள்வேறு காலப்பகுதியில் அவர்களில் ஏழு பேருக்கு சர்வதேச பாதுகாப்பு அவசியம் இல்லை என்ற நிலையில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் எட்டு பேர் சுவீடனில் குடியுரிமை பெற்று சென்றுள்ளனர். ஏற்கனவே அவர்களில் ஒருவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு சென்ற நிலையில் மேலும் 11 பேருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த அகதிகள் குழுவில் மேலும் 19 பேர் தொடர்ந்தும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் உறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating