எதிரணி வீரரை கடித்த கால்பந்தாட்ட வீரருக்கு 10 போட்டிகளில் விளையாடத் தடை
போட்டியொன்றின் போது எதிரணி வீரரின் கையைக் கடித்த கால்பந்தாட்ட உருகுவே கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு 10 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடிவந்த லூயிஸ் சுவாரெஸ் எனும் வீரருக்கே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இங்கிலாந்து பிரிமீயர் லீக் தொடரில் செல்சீ கழக வீரர் பிரானிஸ்லவ் இவானோவிக்கின் கையை சுவாரெஸ் கடித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய இங்கிலாந்து கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஒழுக்காற்றுக் குழு சுவாரெஸுக்கு 10 போட்டிகளில் விளையாட தடை விதிப்பதாக நேற்று முன்தினம் அறிவித்தது.
இதனால் இவ்வருட பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் கழகத்தின் இறுதி நான்கு போட்டிகளில் லூயிஸ் சுவாரெஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தொடரில் லிவர் பூல் கழகத்தின் சார்பில் அதிக கோல்களை அடித்த வீரராக சுவாரெஸ் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் லிவர்பூல் கழகத்தில் இணைவதற்கு முன்னர் நெதர்லாந்தின் அஜக்ஸ் கழகத்தில் விளையாடிய வேளையிலும் 2011 ஆம் ஆண்டு எதிரணி வீரரொருவரை கடித்தார். அப்போது அவர் மன்னிப்பு கோரிய பின் 2 லட்சம் ஸ்ரேலிங் பவுண்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து லிவர்பூல் கழகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
‘லிவர்பூல் கழகமும் அதன் வீரர்களும் இத்தீர்ப்பை அறிந்து அதிர்ச்சிடைந்துள்ளனர்’ என அக்கழகத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான இயன் அய்ரே தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு இன்று வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
Average Rating