சென்னையில் இன்று காலை சோகம் பைக் மீது பஸ் மோதி மூதாட்டி பலி
மாநகர பஸ் மோதி பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த மூதாட்டி பலியானார். சென்னை தி.நகர் பிரகாசம் சாலை கங்கைகரைபுரத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி இந்திராணி (65).நேற்று காலையில் நந்தனத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உறவினருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக தனது பேரன் ஜெகன் (21) உடன் பைக்கில் சென்றார். பின்னால் இந்திராணி அமர்ந்திருந்தார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு காலை 7 மணிக்கு அண்ணாசாலையில் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையம் எதிரே வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி 129 என்ற மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. பைக்கை முந்திச் செல்லும்போது, பைக்கின் வலது கை பிடியில் பஸ் உரசியது. அதில் பைக் கீழே விழுந்தது.அப்போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இந்திராணி கீழே விழுந்தார். அதில் பஸ்சின் பின் சக்கரம் இந்திராணியின் தலையில் ஏறியது. அதில் சம்பவ இடத்திலேயே இந்திராணி இறந்தார். ஜெகன் லேசான காயத்துடன் தப்பினார்.இந்தச் சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating