டெல்லி கழிவறையில் ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி : 23 பேர் கைது!
டில்லி பதர்பூரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பொதுக் கழிப்பறைக்குச் சென்ற 6 வயது சிறுமி பிளேடால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
ஆடை களைந்த நிலையில் இருந்த அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்று மணி நேரம் உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவரது தந்தை உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். பலூன் வியாபாரியான இவர் தெற்கு தில்லி பதர்பூர் பகுதியில் உள்ள தேசிய அனல் மின் நிறுவனம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் 25 ஆண்டுகளாகக் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது 6 வயது மகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அந்தப் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைக்குச் சென்றார்.
பின்னர், ஆடை களைந்த நிலையில் சிறுமி மயங்கிக் கிடப்பதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, சிறுமியை போலீஸார் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமும், கழுத்தில் பிளேடால் கீறப்பட்ட காயமும் இருந்தன.
இதையடுத்து, அந்தச் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்துக் காயப் பிரிவின் தலைமை மருத்துவர் எம்.சி. மிஸ்ரா,”மலம் வெளியேறுவதற்காக சிறுமியின் பெருங்குடலில் சிறப்பு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
மேலும், தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
மூன்று மணி நேர உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார் அவர்.
இது குறித்து சிறுமியின் மாமா சனிக்கிழமை கூறுகையில், “சிறுமியின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஆழமான காயம் இருந்தது. உடல் ஆடை களையப்பட்டிருந்தது’ என்றார்.
இப்படி சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பதர்பூரைச் சேர்ந்த பொதுமக்களும், சிறுமியின் உறவினர்களும் மெஹ்ரௌலி – பதர்பூர் சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அந்தப் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.
மேலும், சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொதுக் கழிப்பறையின் ஒப்பந்ததாரர் உள்பட 22 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating