குடிச்சிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது ஆக்ஷன் எடுங்க சார்: கலெக்டரிடம் சிறுமி மனு!!
குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கும் அப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 7ம் வகுப்பு மாணவி சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
சேலத்தை அடுத்த குப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு. டீக்கடையில் வேலை செய்கிறார். அவரது மனைவி மணிமேகலை. அவர்களுக்கு பௌமிகா(12) என்ற மகளும், 11 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 7ம் வகுப்பு படிக்கும் பௌமிகா வந்திருந்தார். அவர் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
குடிப்பழக்கம் உள்ள என் அப்பா, அடிக்கடி வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார். அவர் அம்மாவை அதிகம் அடிக்கிறார். போன புதன்கிழமை எல்லாரையும் அடித்து விட்டு இரும்புக் கம்பியால் என் அம்மாவை அடித்து, வீட்டுக்குள் போட்டு பூட்டி விட்டுச் சென்றார். பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் அம்மாவை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். எங்க அம்மாவுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே என் அப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
மனுவை படித்துப் பார்த்த கலெக்டர் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி.யிடமும் தெரிவித்தார்.
Average Rating