இறுதியாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் மொத்தம் 614 பேர் கொல்லப்பட்டுள்ளனர்- பாதுகாப்பு அமைச்சு
இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜுன் மாதம் வரை மொத்தம் 102 கிளைமோர்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இறுதியாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் மொத்தம் 614 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத் தரப்பில் 73 பேரும் பொதுமக்கள் 106 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
டிசம்பர் மாதம் முதல் இதுவரையில் மொத்தம் 241 இராணுவத்தினரும் 152 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் டிசம்பர் முதல் 102 கிளைமோர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்னர் 62 கிளைமோர்த் தாக்குதல்கள் நடந்துள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.