மரத்தில் தூக்குபோட்டு காதல் ஜோடி தற்கொலை சிறுத்தையை விரட்டி சடலங்கள் மீட்பு!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கொலக்கம்பை மருதன்கொம்பு கிராமத்தை சேர்ந்த நடராஜ் மகன் கணேசன் (22). அதே பகுதியை சேர்ந்த நஞ்சன் மகள் சாந்தி (20). இருவரும் கூலி தொழிலாளர்கள். கடந்த 2 வருடங்களாக கணேசனும், சாந்தியும் காதலித்தனர்.
கணேசனுக்கு ரத்த சோகை இருந்ததால் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.காதல் விவகாரம் பற்றி அறிந்த சாந்தியின் பெற்றோர், கணேசனின் உடல்நிலையை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சாந்தி கணேசனை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இதனால் கடந்த ஒரு வாரமாக இருவரது வீட்டிலும் பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை இருவரும் வீட்டை விட்டு மாயமாயினர். இன்று காலை அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. காதலுக்கு எதிர்ப்பால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.
கொலக்கம்பை போலீசார் அங்கு சென்றனர். மரத்தில் சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்ததால் சடலங்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் போராடி சிறுத்தையை விரட்டிவிட்டு சடலங்களை மீட்டனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating