திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு!!
திருவள்ளூரில் 2 பேரை கடத்திய கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கும்பலிடம் இருந்து 2 பேரையும் மீட்டனர். சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் குமரன் (24). சென்னை கோவளத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கிறார்.
மனைவி நந்தினி (23). காதல் திருமணம் செய்தவர்கள். திருவள்ளூர் பூங்கா நகர் மாருதி நியூ டவுன் பள்ளிக் கூட தெருவில் வாடகை வீட்டில் கடந்த 15 நாளுக்கு முன் குடியேறினர். நேற்று முன்தினம் குமரன் வீட்டுக்கு 5 பேர் கும்பல் வந்தனர்.
குமரனை சரமாரியாக அடித்து போட்டு விட்டு நந்தினியிடம் தகராறு செய்தனர். மேலும் குமரனின் செயினையும் பறித்தனர். இதற்கிடையே வெளியே ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கும்பல் தப்பியது.
அப்போது கும்பலில் ஒருவன் செல்போனை தவற விட்டு சென்றான். இந்த பிரச்னை காரணமாக குமரன் வீட்டை காலி செய்ய முடிவு செய்தார். உறவினர்கள் சின்னா, டேவிட் ஆகியோருடன் நேற்று காலை வீட்டில் உள்ள பொருட்களை அள்ளிக் கொண்டு இருந்தார்.
அப்போது ஏற்கனவே வந்த கும்பல் மீண்டும் வந்தது. செல்போனை கொடுத்து விடு என்று குமரனிடம் தகராறு செய்தனர். திடீரென சின்னா, டேவிட் ஆகியோரை ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்று விட்டனர்.
திருவள்ளூர் தாலுகா போலீசில் குமரன் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் தலைமையில் போலீசார், திருவள்ளூர், புட்லூர் உள்ளிட்ட பகுதியில் தீவிரமாக தேடினர்.
புட்லூர் ரயில் நிலையம் அருகே புதரில் பதுங்கியிருந்த கும்பலை சுற்றி வளைத்தனர். திருவள்ளூர் மாருதி நியூ டவுணை சேர்ந்த சார்லஸ் என்ற முருகன் (30), புட்லூரை சேர்ந்த இளையராஜா (29), பூங்காநகரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (21) ஆகியோரை கைது செய்தனர். 2 பேர் தப்பி விட்டனர்.
இவர்கள் பிடியில் இருந்த சின்னா, டேவிட் ஆகியோரை மீட்டனர். கத்தி, அரிவாள்களை பறிமுதல் செய்தனர். தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Average Rating