வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்!!
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவன், மாமியாரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்தவர் மகேஷ் (22). தொழிலாளி.
இவருக்கும் கொருக்குப்பேட்டை ஜெஜெ நகரை சேர்ந்த கவிதாவுக்கும் (20) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாதனா என்ற 7 மாத குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது மகேஷ், மனைவியை திட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த மகேஷ் சாப்பிடாமல் அறையில் படுத்திருந்த கவிதாவை எழுப்ப சென்றுள்ளார். அங்கு கவிதா தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆர்டிஓ விசாரணையும் நடந்தது. அதில் வரதட்சணை கொடுமையால் கவிதா தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து மகேஷ் அவரது தாயார் கலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Average Rating