பலாத்காரத்துக்கு ஆளான டெல்லி மருத்துவ மாணவி சிங்கப்பூரில்தான் இறந்தார் இன்ஸ்பெக்டர் சாட்சியம்!!
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா, சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் நேற்று கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்.
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி பலாத்காரம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுவன் மீது சிறார் நீதிமன்றத்திலும், மற்ற 5 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் பஸ் டிரைவர் ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். வினய், முகேஷ், பவன் மற்றும் அக்ஷய் ஆகிய 4 பேர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் இதுவரை 78 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
நேற்று 78வது சாட்சியாக வழக்கை விசாரித்து வரும் வசந்த்விகார் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சாட்சியம் அளித்தார். அப்போது, மருத்துவ மாணவி டெல்லியிலேயே உயிரிழந்துவிட்டதாக எதிர்தரப்பு வக்கீல்கள் முன்வைத்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். சிங்கப்பூர் மருத்துவமனையில்தான் மாணவியின் உயிரி பிரிந்ததாகவும், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்குவதற்காக தான் சிங்கப்பூர் சென்றதாகவும் தெரிவித்தார்.
டிசம்பர் 16ம் தேதி பலாத்காரத்துக்கு ஆளான மாணவிக்கு முதலில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பலன் அளிக்காததை தொடர்ந்து தனி விமானத்தில் சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கும் சிகிச்சை பலன் இன்றி கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் உயிரற்ற உடல் தான் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது கோர்ட்டில் அதிகாரப்பூர்வமாக அந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.
Average Rating