ரூ.5 ஆயிரத்துக்கு பச்சிளம் குழந்தை விற்பனை!!
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர். அரக்கோணம் அடுத்த மேல்களத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன்(49), கண்பார்வை குறைவானவர்.
இவரது மனைவி சாந்தி(40), கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்துக்கு பிறகு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு 4 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மனைவி சாந்தி இறந்ததால் பார்வை குறைபாட்டுடன் கைக்குழந்தையை வளர்க்க முடியாமல் சீனிவாசன் மிகவும் சிரமப்பட்டார்.
இதைப் பார்த்து வேதனை அடைந்த அவரது மூத்த மகன் வெங்கடேசன்(15) மற்றும் குருவராஜபேட்டையை சேர்ந்த அவரது மைத்துனர் நடராஜன்(46) ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் 4 மாத ஆண் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரிடம், அக்குழந்தையை ரூ.5 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த தனது கைக்குழந்தை மாயமானதை அறிந்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், அரக்கோணம் தாலுகா பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் புத்தூரில் சந்திரசேகரனிடம் ஆண் குழந்தையை விற்றது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டு, அதை தந்தை சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக, குழந்தையின் அண்ணன் வெங்கடேசன், தாய் மாமா நடராஜன் மற்றும் சந்திரசேகரன் ஆகிய 3 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.
Average Rating