போலீசுக்கு தகவல் தந்தவரை அரிவாளால் வெட்டிய கும்பல்!!
திருப்பாச்சேத்தி எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் போலீசுக்கு தகவல் கொடுத்தவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடந்த மருதுபாண்டியர் குரு பூஜைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி வந்த முளக்குளம் செல்லப்பாண்டியன் தரப்பினருக்கும், புதுக்குளம் பிரபு தரப்பினருக்கும் வேம்பத்தூரில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இதை தடுக்க முயன்ற திருப்பாச்சேத்தி எஸ்ஐ ஆல்வின் சுதன், கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பிரபு, பாரதி உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பிரபு, பாரதி ஆகிய இருவரும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் ஜாமீனில் வெளிவந்து புதுக்குளத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில் புதுக்குளத்தை சேர்ந்த பில்லத்தியான் (45) அங்குள்ள மின் மோட்டார் பம்ப் ஷெட்டில் நேற்று முன்தினம் இரவு குளிக்கச் சென்றார்.
அப்போது அங்கிருந்த 4 பேர் பில்லத்தியானின் இடது தோள்பட்டை, வலது முதுகு, தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த பில்லத்தியான் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகக் கூறி, 4 பேர் தன்னை அரிவாளால் வெட்டியதாக போலீசில் பில்லத்தியான் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், நான்கு பேர் மீது மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Average Rating