24 ஆண்டுகளாக வயிற்றில் கத்திரிக்கோலுடன் தவிக்கும் பெண்!!
மருத்துவர்களின் கவனக்குறைவால் வயிற்றில் கத்திரிக்கோலுடன் 24 ஆண்டுகளாக தவிக்கும் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, என் மனைவி இந்திராணி(62). வயிற்று வலிக்காக மதுரை அரசு மருத்துவமனையில் 1989ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் வலி நிற்கவில்லை.
பின்னர் தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், இந்திராணி வயிற்றில் கத்திரிகோல் இருப்பதும், கத்திரிகோலை சுற்றி சதை வளர்ந்திருப்பதும் தெரியவந்தது.
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது கவனக்குறைவாக, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய கத்திரிகோலை என் மனைவியின் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளனர்.
இதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மனைவிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள கத்திரிகோலை அகற்ற அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள கத்திரிகோலை அகற்ற மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டார்.
மனுவுக்கு பதிலளிக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அரசு மருத்துவமனை டீனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating