பெற்ற மகனை அடித்து கொன்ற தாய்..!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி வள்ளியம்மை (வயது60).
இவர்களது மகன்கள் கண்ணதாசன் (35), தேவதாசன் (32). கண்ணதாசனுக்கு அவருடைய தாயார் வள்ளியம்மை மற்றும் தம்பி தேவதாசன் ஆகியோருடன் சொத்துப் பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு 8.30 மணி அளவில் கண்ணதாசனுக்கும் அவரது தாய் வள்ளியம்மை, மற்றும் தம்பி தேவதாசன் ஆகியோரிடையே சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது வள்ளியம் மையும், தேவதாசனும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் கண்ணதாசனை தாக்கினர். இதில் படுகாயமடைந்த கண்ணதாசன் வீட்டில் மயங்கி விழுந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்து கிடந்த கண்ணதாசனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
அப்போது அக்கம் பக்கத்தினரையும் வள்ளியம்மையும், தேவதாசனும் தாக்கி கண்ணதாசனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்ததாக தெரிகிறது.
இது குறித்த தகவல் பரவாக்கோட்டையில் தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு சென்றிருந்த கண்ணதாசனின் மனைவி சுகன்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுகன்யா தனது மாமியார் வீட்டுக்கு விரைந்து வந்து கண்ணதாசனை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் அங்கிருந்து கண்ணதாசன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணதாசன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவதாசனை கைது செய்துள்ளனர். மேலும் தாயார் வள்ளியம்மையை தேடி வருகின்றனர்.
சொத்து தகராறில் பெற்ற மகனை தாய் மற்றொரு மகனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating