இங்கிலாந்தில் நடைபயிற்சி மேற்கொண்ட ராணுவ வீரரின் மனைவி படுகொலை!!
இங்கிலாந்து நாட்டின் ஆர்பர்ஃபீல்ட் காரிசன் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில், 30க்கும் மேற்பட்ட நேபாளிய ராணுவ வீரர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள், ஒரு வீரரின் மனைவியான கிருஷ்ணமாயா மாபோ என்பவர், ஞாயிற்றுக்கிழமை மாலை அருகிலிருந்த மரங்கள் சூழ்ந்த பாதை ஒன்றில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
திங்கள் அன்று காலை கிருஷ்ணமாயாவைக் காணவில்லை என்று காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் அந்தப் பகுதியைச் சுற்றி வந்த அதிகாரிகள் முதலில் கிருஷ்ணமாயாவின் உடலைக் கண்டுபிடிக்கத் தவறினர். மறுபடியும் தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட அவர்கள், குடியிருப்புப் பகுதியில் இருந்து 500 அடி தொலைவில் கிருஷ்ணமாயாவின் பிரேதத்தை மீட்டனர்.
அவர் இறந்து 18 மணி நேரத்திற்குமேல் ஆகியிருக்கலாம் என்று கருதிய காவல்துறையினர் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையின்போது, அவர் கழுத்து இறுக்கப்பட்டதால் மூச்சுத் திணறி இறந்துள்ளார் என்று தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக 30 வயது ஆசாமி ஒருவனை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கான காரணமும், கொலை செய்த நபர் குறித்தும் இதுவரை தெரியவில்லை.
இதற்கிடையே, காரிசன் பகுதியில் குடியிருப்போரைத் தனியாகச் செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கும்படியும் காரிசன் பகுதியின் காவல்துறைத் தலைவர் இயான் கிப்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Average Rating