5 சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!!
மும்பை அருகே வாஷி பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி திடீரென காணாமல் போனாள்.
உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால் பெற்றோர் பதற்றமடைந்தனர். அவர்கள் உடனே மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.
மறுநாள் அதிகாலை, சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் பிணம் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு கழுத்தை நெரித்து யாரோ கொன்றிருக்கிறார்கள் என்பதை அறிந்தனர்.
இதனையடுத்து, சிறுமியின் வீட்டருகில் வசித்த டட்டூ அம்போ ரொகாடே (53) என்பவரிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதிலளித்தார்.
அவரிடம் தீவிரமாக விசாரித்த போது சிறுமியை கற்பழித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சாட்சிகளாக 27 பேர் வாக்குமூலம் அளித்தனர். அவர்களில் சிலர் கோணிப்பையுடன் சம்பவத்தன்று குற்றவாளியை பார்த்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, இன்று தீர்ப்பளித்த நீதிபதி, “5 வயது இளம் தளிரின் வாழ்வை கொடூரமான முறையில் சீரழித்த குற்றவாளியின் செயலை அரிதிலும் அரிதான நிகழ்வாக கருதி, மரண தண்டனை விதிக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.
சம்பவம் நிகழ்ந்த 4 மாதங்களில் விரைவு நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. தண்டனை பெற்ற இவர், தானே அருகேயுள்ள முர்தாபாத் பகுதியில் பள்ளி ஆசிரியரை கற்பழிக்க முயன்ற குற்றத்துக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் தர்ம அடி கொடுத்து ஊரை விட்டு விரட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating