மன்னார் ஆயரின் கருத்துக்கு அரசு கண்டனம்
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஆயரின் கருத்துக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செயற்பாட்டுக்கும் வித்தியாசம் கிடையாது எனவும் அரசு சுட்டிக் காட்டியது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
13 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தை வலுவிழக்கச் செய்து எந்த அதிகாரமும் இல்லாதவொரு தேர்தலை அரசு வடக்கில் நடத்த முற்பட்டால் அத்தேர்தலில் வடக்கு மக்கள் வாக்களிக்க கூடாது என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி அரசு இது குறித்து எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்று கேட்டபோதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; ஒரு சமயத்தில் மிக உயர்வான பதவி வகிக்கும் ஒருவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருப்பதையிட்டு கவலைப்படுகின்றோம்.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களை வாக்களிக்க வேண்டாமென புத்தியுள்ள எவரும் கேட்க மாட்டார்கள். மன்னார் ஆயரின் இந்தக் கருத்தானது அந்த மதத்துக்கே அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடியதொன்றாகும்.
நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வடக்கு மக்களை தேர்தலில் வாக்களிக்க கூடாது என கட்டளை பிறப்பித்து தேர்தலின் போது மக்களை வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்.
பயங்கரவாத யுத்தத்திலிருந்து நாம் நாட்டை மீட்டெடுத்து நாட்டின் ஏனைய பிரதேசங்களில் போன்றே வடக்கிலும் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பி வருகின்றோம். இவ்வாறானதொரு நிலைமையில் வடக்கு மக்களை தேர்தலில் வாக்களிக்க வேண்டாமெனக் கேட்பது ஜனநாயக விரோதச் செயற்பாடாகும்.
ஆயரின் இந்தக் கூற்று புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்குமிடையில் வித்தியாசம் கிடையாது என்பதையே காட்டுகிறது.
ஆயர் இராயப்பு ஜோசப்பின் இக்கருத்து தொடர்பில் அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Average Rating