கொழும்பில் அப்பாவி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த சம்பவம்
கொழும்பில் அப்பாவி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. முன்பெல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த இடங்களில் கொள்ளையர்கள் தனியாக சிக்குபவர்களிடம் உடைமைகளை கொள்ளையடித்துப் போவார்கள். ஆனால் இப்போது வழிப்பறிக்கு பாழடைந்த இடம் தேவையில்லை மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் நடைபெறுகின்றது.
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் முகாமையாளரின் மகனுக்கு நடைபெற்ற விபரீதமான உண்மைச்சம்பவம் இதுவாகும்.
கடந்த திங்கட்கிழமை குறித்த முகாமையாளரின் மகன் கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக பம்பலப்பிட்டியிலிருந்து காலை 10.40 மணியளவில் 155 இலக்க பஸ்ஸில் ஏறியுள்ளார். இவருடன் இன்னும் சிலர் ஏறியுள்ளனர். கிடைத்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நடத்துனரிடம் கொட்டாஞ்சேனைக்கான டிக்கட்டினையும் பெற்றுக் கொண்டு பயணத்தை தொடர்ந்துள்ளார்.
சந்கேகத்திற்கு இடமான நபரொருவர் அதே பஸ்ஸில் ஏறி நகரமண்டபத்திற்கு டிக்கட்டினைப் பெற்றுக் கொண்டு பயணித்துள்ளார். சிறு தூரம் பஸ் பயணிக்கையில் முகாமையாளரின் மகனுக்கு அருகில் ஆசனம் காலியாகவே குறித்த சந்தேகத்திற்கு இடமான நபர் வந்து அதில் அமர்ந்துள்ளார்.
பின்னர் தமிழிலில் குறித்த நபர் கதையைக் கொடுத்து முகாமையாளரின் மகனுடன் தமிழில் உரையாடியுள்ளார். நகர மண்டபம் நெருங்கவே மீண்டும் பணத்தைக் கொடுத்து மருதானை வரை பஸ் நடத்துனரிடமிருந்து டிக்கட் பெற்றுக்கொண்டுள்ளார்.
நகரமண்டபம் தாண்டுகையில் திடீரென கத்தியை மறைத்துக் காட்டி அதனை முகாமையாளரின் மகனிடம் இடுப்பு பகுதியில் வைத்து உன்னிடம் பணம் இருக்கா? கையடக்க தொலைபேசி இருக்கா? எனக் கேள்வி எழுப்பியுள்ளதுடன் பணத்தை தருமாறும் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த முகாமையாளரின் மகன் தான் வகுப்பிற்கு செல்வதற்காக 100 ரூபா மாத்திரமே வைத்துள்ளதாகக் கூறி கண் கலங்கியுள்ளார். மீண்டும் அச்சுறுத்தி விட்டு டவர் மண்டபத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்னர் குதித்து அந்நபர் தலைமறைவாகியுள்ளார்.
இதனை பாதிக்கப்பட்டவர் தனது தந்தையிடம் கூறிய போது குறித்த பஸ்ஸில் இவ்வாறான வழிபறிச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் பயத்தின் காரணமாக கூறுவதில்லை என்பதையும் தமது நண்பர்களின் ஊடாக தெரிந்துள்ளார்.
155 பஸ் மட்டக்குளி தொடக்கம் கல்கிசை வரையில் செல்கின்றது. இதில் பெரும்பாலான தமிழர்கள் பயணிக்கின்றனர்.
சிங்கள மொழி தெரியாதவர்கள் அச்சத்தினால் உடைமைகளை கொள்ளையர்களிடம் இழந்த சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.
குறிப்பிட்ட குழுவொன்றே திட்டமிட்டு பெண்கள் மற்றும் சிறுவயதினரைக்குறி வைத்து இவ்வாறு வழிபறிகளில் ஈடுபடுகின்றனர்.
Average Rating