உடலுறவே திருமணமா?
இருபத்தியோரு வயதான ஆணும், பதினெட்டு வயதான பெண்ணும் உடலுறவு கொண்டால் அவர்கள் திருமணமானவர்களாக கருதப்படுவர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் கர்ணன், அளித்திருக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
கோவைப்பகுதியைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண், தான் தன் கணவரால் கைவிடப்பட்டுவிட்டதாகக்கூறி பராமரிப்புத் தொகை கேட்டு நீதிமன்றம் சென்றார். அந்த பெண்ணிடமிருந்து பிரிந்து சென்றவர் அவர்களது இரு குழந்தைகளுக்கும் தானே தகப்பன் என்று ஏற்றுக்கொண்டதால், அந்த குழந்தைகளின் பராமரிப்புக்காக மட்டும் மாதம் தலா 500 ரூபாய் வழங்கினால் போதும்; மற்றபடி அவர்களுக்கு திருமணமானதாக சான்றுகள் எதுவும் இல்லாத நிலையில், அந்த பெண் குடும்பப் பராமரிப்புத்தொகை எதையும் கோரமுடியாது என்று குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் செய்த மேல் முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பளிக்கையிலேயே நீதிபதி கர்ணன் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உடலுறவு கொண்டு பின்னர் ஏமாற்றும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று ஒரு சிலரும், திருமணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்ள இந்த தீர்ப்பு தூண்டக்கூடும் என்று ஒரு சிலரும், உடலுறவையே திருமணமாக்குவது என்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று வேறு சிலரும் வாதிடுகின்றனர்.
இந்த தீர்ப்பில் நீதிபதி கர்ணன் புதிதாக எதனையும் சொல்லிவிடவில்லை என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு. அதேசமயம் இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத வேறுபல விஷயங்களை அவர் தேவையில்லாமல் பேசியிருக்கிறார் என்று அவர் குறைகூறியிருக்கிறார்.
அதேநேரம், இந்த தீர்ப்பினால் பாரதூர மாற்றங்கள் எவையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்கிறார் சந்துரு. போகிற போக்கில் நீதிபதியால் சொல்லப்படும் கருத்துக்கள் தீர்ப்பாக கருதப்படாது என்றும் நீதிபதி சந்துரு தெரிவித்தார்.
Average Rating