விரைவில் மதமாற்ற தடைச்சட்டத்தை அமுல்செய்வதாக ஜனாதிபதி உறுதி
மதமாற்றத் தடைச்சட்டத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள ராவய அமைப்பின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
பசுவதை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொண்ட சிங்கள ராவய பிரதிநிதிகளை அலரி மாளிகைக்கு வரவழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
அந்த சந்திப்பின் போது இலங்கையில் மதமாற்ற தடைச்சட்டம், வடக்கு கிழக்கு உள்பட நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் பாரிய புத்தர் சிலைகளை நிறுவுதல், வடக்கில் பௌத்த சின்னங்களை புனரமைத்துப் பாதுகாத்தல் மற்றும் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதைத் தடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து சிங்கள ராவய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, கூடிய விரைவில் அவற்றை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மதமாற்றத் தடைச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் பௌத்த மதத்தில் வெறுப்புக் கொண்டுள்ள மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மதமாறுவதை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான அந்தஸ்து கிடைத்து விடும்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் பொதுபல சேனா அமைப்பினர் கிறித்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளும் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Average Rating