முள்ளியவளையில் வல்லுறவிற்கு முயன்ற இராணுவத்தினர் மீது பொதுமக்கள் தாக்குதல்!!
முள்ளியவளை வசிக்கும் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தும் நோக்கோடு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை அங்கு சென்ற இலங்கை படையினர் மூவர் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் ஓடித்தப்பியுள்ளனர் என அறியப்படுகிறது. ஆயினும் ஒரு படைச்சிப்பாயை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்தார்கள். படைச் சிப்பாய் இவ்வாறு கட்டி வைக்கப்பட்ட செய்தியறிந்த ஏனைய படையினர் திங்கட்கிழமை காலை அந்த இடத்திற்குச் சென்று, பொதுமக்களை அச்சுறுத்திவிட்டு குறித்த சிப்பாயை மீட்டுச் சென்றுள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது.
முள்ளியவளை ஹிக்கிராபுரத்தில் முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் கிராமத்திற்கு அண்மையில் சிறிலங்கா படையினரின் காவலரண் உள்ளது. இந்தக் காவலரணிலுள்ள மூன்று படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தக் கிராமத்தில் அழகான பெண்கள் வசிக்கும் வீடொன்றில் நுழைந்து அவர்களைப் பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்றுள்ளனர். விழிப்படைந்த பெண்கள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த மூன்று இராணுவத்தினரையும் தாக்கத் தொடங்கினர். பொதுமக்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத படையினர் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆயினும் பொதுமக்கள் ஒரு சிப்பாயை மடக்கிப் பிடித்தனர்.
தான் ஒரு படைச் சிப்பாய் என்று அவன் கூறியும் மக்கள் அவனை விடவில்லை. இதன் காரணமாக காலை அவ்விடத்துக்கு வந்த இராணுவத்தினர் குறிப்பிட்ட தமது சகாவை மீட்டுச்சென்றுள்ளார்கள். குற்றம் இழைத்த படைச் சிப்பாய்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக அவனை பத்திரமாக மீட்டுச் சென்ற படையதிகாரிகளின் செயல் குறித்து மேற்படி பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் கடும் அதிருப்தியடைந்ததுடன் கவலையும் வெளியிட்டுள்ளனர்.
Average Rating