50 வயதிலும் அதிரடி ஆட்டமாடிய ஸ்ரீதேவி!!
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. சிவாஜி, ரஜினி, கமல் உள்பட அனைத்து முன்வரிசை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். ஒரு கட்டத்தில் இந்தி சினிமா இவரை தத்தெடுத்துக்கொண்டது. அதனால், தென்னிந்திய சினிமாவை விடுத்து பாலிவுட்டில் முன்னணி நாயகி ஆனார் ஸ்ரீதேவி. பின்னர் தன்னை இந்திக்கு கொண்டு சென்ற, தயாரிப்பாளர் போனிகபூரையே திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார் ஸ்ரீதேவி.
தற்போது அவரது மகள்களும் கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார்கள்.இந்தநிலையில், மீண்டும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி. அவரது நடிப்பு பேசப்பட்டதால், இப்போது மேலுமொரு இந்தி படத்திலும நடிக்கிறார். இந்தநிலையில், சீனாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில், பிரபுதேவாவுடன் மேடையில் நடனமாடுகிறார் ஸ்ரீதேவி.
ஆனால், முதலில் அவரிடம் பிரபுதேவா கேட்டபோது, இப்போது 50 வயதாகி விட்டது. இந்த வயதில் மேடையில் எப்படி நடனமாடுவது என்று தயங்கினாராம். அதற்கு, உங்களால் முடியும். இப்போதும் நீங்கள் யூத் மாதிரிதான் இருக்கிறீர்கள். அதனால் வயதை ஒரு தடையாக கருதாமல் கண்டிப்பாக என்னுடன் நடனமாடியே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினாராம் பிரபுதேவா.
அதையடுத்து சம்மதம் சொன்ன ஸ்ரீதேவி, தற்போது நடந்து வரும் ரிகர்சலில் மனதளவில் உற்சாகத்தை வரவழைத்து பிரபுதேவா ரேஞ்சுக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாராம். அதனால் ஸ்ரீதேவியின் இந்த நடனம் மேடையேறும்போது அவரை இன்னும் பெரிய அளவில் பேச வைக்கும் என்று கூறியுள்ளார் பிரபுதேவா.
Average Rating