மருதானையில் இன்று முதல் புதிய போக்குவரத்து முறை..!!
மருதானை பாலம் சந்தி தொடக்கம் டெக்னிக்கல் சந்திவரை டெக்னிக்கல் சந்தி தொடக்கம் சங்கராஜா சுற்றுவட்டம் வரை, சங்கராஜா சுற்றுவட்டம் தொடக்கம் மருதானை பாலம் சந்திவரை ஒரு வழிப் போக்குவரத்துக்கான ஒத்திகை நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதால் அதனை செயற்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி இன்று காலை 6 மணி தொடக்கம் குறித்து வீதிப் போக்குவரத்து புதிய முறை நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, மாளிகாவத்தை வீதி மற்றும் ஆமர் வீதியில் இருந்து புறக்கோட்டை செல்லும் வாகனங்கள் சங்கராஜா மாவத்தையில் பஞ்சிகாவத்தை வீதிக்குள் நுழைந்து எல்பின்ஸ்டன் சினிமா அரங்குக்கு அருகில் தெற்காக திரும்பி தொழில்நுட்ப சந்தியில் வலது பக்கம் திரும்பி புறக்கோட்டைக்கு செல்ல முடியும்.
காமினி சுற்றுவட்டம் மற்றும் புஞ்சி பொரளை திசையில் இருந்து ஆமர் வீதி, மாளிகாவத்தை பகுதிக்கு வரும் வாகனங்கள் நேரடியாக தொழில்நுட்பக்கல்லூரி சந்திக்குச் சென்று தெற்காக திரும்பி சங்கராஜா மாவத்தை வீதியில் பயணித்து ஆமர்வீதி அல்லது மாளிகாவத்தையை அடையமுடியும். புறக்கோட்டை மற்றும் நீதிமன்ற திசையில் இருந்து காமினி சுற்று வட்டம் அல்லது பொரளைக்கு வரும் வாகனங்கள் நேரடியாக சங்கராஜா சுற்றுவட்டம் வரை சென்று அங்கு பஞ்சிகாவத்தை வீதி ஊடாக மருதானை பாலம் சந்திக்கு வந்து புஞ்சி பொரளை அல்லது காமினி சுற்றுவட்டம் திசைக்குச் செல்லமுடியும்.
தொழிநுட்பக்கல்லூரி சந்தியில் நீதிமன்ற வீதி மற்றும் பாலம் சந்தியை தாண்டி காமினி சுற்றுவட்டம் திசைக்கு வாகனங்களை செலுத்த முடியும்.
மாளிகாவத்தை வீதியில் இருந்து வாகனங்கள் சங்கராஜா சுற்றுவட்டத்தை தாண்டி பின் ஆமர்வீதி திசைக்குச் செல்ல முடியாது. அவ்வாறு வரும் வாகனங்கள் கெத்தாராமவீதி, பபாபுள்ளே வீதி ஊடாக, கிரான்ட்பாஸ் மாவத்தை வழியாக ஆமர்வீதியை வந்தடையமுடியும்.
Average Rating