கற்பழிப்பு புகார் கொடுத்த நார்வே பெண்ணுக்கு 16 மாத தண்டனை..!!
நார்வே நாட்டைச் சேர்ந்த மார்ட்டே டெபோரா டலேல்வ் என்ற பெண்மணி கட்டிடங்களுக்கு உள் அலங்கார வேலைகள் செய்யும் ஒரு நிபுணர். 24 வயதுடைய இவர் கடந்த மார்ச் மாதம் துபாய் சென்றிருந்தார். அங்கு மார்ச் 6-ம்தேதி இரவு சக நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தபோது கற்பழிக்கப்பட்டார்.
இதுகுறித்து புகார் கொடுக்க அவர் போலீசாரிடம் சென்றார். அப்போது அவருடைய பாஸ்போர்ட், பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து கொண்ட போலீசார் நான்கு நாட்கள் கழித்து மூன்று நீதிமன்றங்களில் அவர் மீதே வழக்குப் பதிவு செய்தனர். அதில் டெபோரா மது அருந்திவிட்டு வெளி நபரிடம் பாலுறவில் ஈடுபட்டதாகவும், உண்மையைத் திரித்துக் கூறுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதையடுத்து கோர்ட்டில் அவருக்கு 16 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரைக் கற்பழித்ததாகக் கைது செய்யப்பட்டவருக்கு 13 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு நார்வேயில் உள்ள மனித உரிமைக் குழுவினரையும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. நார்வே அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக நிலைமையினை அறிந்து கொள்ள துபாய் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளினாலும், சிறைத்தண்டனையாலும் அதிர்ந்து போயுள்ள டெபோரா இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார். வரும் செப்டெம்பர் மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
Average Rating