கொழும்பில் பலத்த காற்றால் மரம் முறிந்ததில் ஒருவர் பலி; பல வீடுகள் சேதம்..!!
கொழும்பில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென வீசிய கடும் காற்று காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மஹரகம மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவை ஊடறுத்து காலை 6 மணியளவில் பலத்த மழையுடன் கூடிய காற்று வீசியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி கிருள வீதியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அருகில் கடும் காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலியானதாகவும், மஹரகமவில் 20 வீடுகளும் திம்பிரிகஸ்யாய பகுதியில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடும் காற்று காரணமாக டீ சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமட்டகொட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் இதனால் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ரீட் மாவத்தை, சேரம் வீதி, ஜே.டி.பெர்னாண்டோ மாவத்தை, தெமட்டகொட வீதிகளில் மரம் முறிந்து விழுந்தமையினால் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வீதிகளின் குறுக்கே விழுந்துள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
இது இவ்வாறிருக்க பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை இன்றும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தென்மேல் பருவக்காற்று காரணமாக மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை நகரங்களிலும் மழை பெய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தென் கடற்பரப்புக்கு அப்பால் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றருக்கும் மேல் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
Average Rating