தூத்துக்குடிக்கு நீர்மூழ்கி கப்பல் வருகை: இலங்கை அகதிகள் வருகை எதிரொலி?
தூத்துக்குடி துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான “ஐ.என்.எஸ். சிந்துராஜ்’ என்ற நீர்மூழ்கி கப்பல் வியாழக்கிழமை வந்தது. இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் வேளையில், நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு போர் கப்பல்கள் பல முறை வந்துள்ள போதிலும், நீர்மூழ்கி கப்பல் வருவது இதுவே முதல் முறையாகும். வியாழக்கிழமை காலை தூத்துக்குடி துறைமுகத்திற்குள் நுழைந்த “ஐ.என்.எஸ். சிந்துராஜ்’ 2-வது கூடுதல் கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான இந்த நீர்மூழ்கி கப்பல் 96 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த கப்பலின் கேப்டன் ரத்தோஜி. இக் கப்பலில் 40 கடற்படை வீரர்கள் உள்ளனர்.
இந்த நீர்மூழ்கி கப்பல் இந்தியாவில் உள்ள அனைத்துத் துறைமுகங்களுக்கும் பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நீர்மூழ்கி கப்பலின் வருகையில் குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லை. வழக்கமான வருகைதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நீர்மூழ்கி கப்பல் காலையில் எத்தனை மணிக்கு தூத்துக்குடி துறைமுகம் வந்தது, எங்கிருந்து வந்தது, எத்தனை நாள்கள் இங்கு நிற்கும், இங்கிருந்து எங்கே செல்கிறது போன்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.