வடக்கில் நியாயமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் : ஐ.தே.க. வலியுறுத்தல்..!!
வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதைப் போன்று விடுதலைப்புலிகளும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் வடக்கில் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நியாயமான தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
மேலும், இன்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மூலமாகவே அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலை காணப்படுகின்றது. தயாசிறி மூலமாக வடமேல் மாகாண சபை தேர்தல்களில் வெற்றி பெற அரசாங்கம் முயற்சித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இராஜகிரியவில் ஐக்கிய தேசியக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இம்முறை வடமாகாண சபை தேர்தலில் அரசாங்கம் விடுதலைப் புலிகளை போட்டிக்கு நிறுத்தியுள்ள அரசாங்கத்திற்கு வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாத நிலையிலேயே அவர்கள் இவ்வாறான செயல்களில் இறங்கியுள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் அரசாங்கம் வெற்றி பெற முடியாத நிலை உள்ளதன் காரணமாகவே தயாசிறி ஜயசேகரவை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இன்று ஐக்கிய தேசியக்கட்சி இல்லையென்றால் அரசாங்கம் இல்லை என்ற நிலைமை காணப்படுகின்றது.
மக்கள் தமது ஆதங்கத்தினை அரசாங்கத்திற்கு எதிராக இம்முறை வெளிப்படுத்துவார்கள். அத்தோடு ஐக்கிய தேசியக்கட்சியின் நிலைப்பாட்டினை சிறந்த முறையில் இம்முறை தேர்தல்களின் போது வெளிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Average Rating