சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்க மாணவருக்கு 40 இலட்சம் டொலர் இழப்பீடு..!!
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு 40 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமாகப் பணத்தை இழப்பீடாகக் கொடுப்பதற்கு அமெரிக்காவின் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பொலிஸ் சிறைக்கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இளைஞனை அதிகாரிகள் முழுமையாக மறந்துபோன நிலையில் கைவிட்டிருந்தனர்.
இதனால் நான்கு நாட்களாக தண்ணீரும் உணவுமில்லாமல் தவித்த இளைஞன் தனது சிறுநீரையே குடிக்க நேர்ந்துள்ளது.
போதைப்பொருள் தேடலின்போதே இந்த இளைஞனையும் பொலிஸார் பிடித்துச் சென்றிருந்தனர்.
ஆனால், அவர் கைது செய்யப்படவும் இல்லை. குற்றச்சாட்டுக்கள் எதுவும் அவர்மீது பதிவு செய்யப்படவும் இல்லை.
ஆனால் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரை எவருமே கவனிக்கவில்லை. தான் சுவரில் உதைத்து கத்தி கூக்குரலிட்டதாக அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
4 நாட்களாக சிறைக்கூடத்தில் நீரின்றி தவித்த இளைஞன் பின்னர் 5 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற நேர்ந்தது. இதில் 3 நாட்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவிலும் இருந்துதான் அவர் மீண்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் வருத்தமடைந்துள்ளதாக அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating