வேட்டியுடன் மெட்ரோ ரயில் ஏற வந்த முதியவரை தடுத்து நிறுத்திய துபாய் போலீஸ்..!!
இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார்.
அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம்.இதனால் அந்த முதியவரும், மகளும் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்துப் போய் திரும்பும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து முதியவரின் மகளான மதுமது கூறுகையில், நானும் எனது தந்தையும் எடிசலாட் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றோம்.
மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் எனது தந்தை வேட்டியுடன் இருந்ததால் அவரை அனுமதிக்க மறுத்து நிறுத்தி விட்டார் ஒரு போலீஸ்காரர்.நான் அந்த போலீஸ்காரரிடம் பலமுறை கெஞ்சியும், வேட்டி பாரம்பரிய உடை என்று கூறியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் நாங்கள் ரயில் ஏற முடியாமல் போனது என்றார்.இந்த விவகாரம் குறித்து மதுமதி அங்கு போலீஸ் அலுவலகத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் கழக அதிகாரி ரமதான் அப்துல்லா கூறுகையில், உடைக் கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. எப்படி இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை.
கௌரவமான உடை எதுவாக இருந்தாலும் தாராளமாக அணிந்து செல்லலாம். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Average Rating