இரகசியப் பொலிஸார் எனக் கூறி பெண்ணிடம் பணம், நகைகள் அபகரிப்பு..!!
இரகசியப் பொலிஸார் என தெரிவித்து பெண்ணொருவரை முச்சக்கர வண்டியொன்றில் அழைத்துச்சென்ற சிலர் அவரிடமிருந்த ஒரு இலட்சத்து என்பதாயிரம் ரூபா பணத்தையும் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
நோயாளி ஒருவரை பார்ப்பதற்காக தனது கணவருடன் இந்தப் பெண் சிலாபம் வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அங்கிருந்து கணவர் சென்ற பின்னர் அந்தப் பெண்ணிடம் சென்ற இரண்டு பேர் தங்களை இரகசியப் பொலிஸார் என கூறி அவரை வெளியில் அழைத்து வந்து முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர்.
உடப்பு ஆண்டிமுனை பகுதியைச் சேர்ந்த 48 வயதான காளிமுத்து சித்ரகலா என்ற பெண்ணிடமிருந்தே பணமும் நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பெண்ணிடம் குண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனால் தங்க ஆபரணங்களை கழற்றி அதனை தம்மிடம் இருந்த பொதியில் வைக்குமாறும் சந்தேக நபர்கள் கூறியதாகவும் பின்னர் தனது கைப்பைøயை சோதனையிட்ட அவர்கள் தன்னை நடுவழியில் விட்டு சென்றதாகவும் அந்தப் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அவர்கள் சென்ற பின்னர் கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் பணம் மற்றும் நகை கொள்ளையிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சிலாபம் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating