இராணுவத்தினர் 100 பேரிடமும் பொதுமக்களிடமும் வாக்கு மூலம், வீடியோ பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை..!!
வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பில் ஊடகங்களின் வீடியோ பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும் அச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்ததாகவும் கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.ஆர்.எல். ரணவீர தெரிவித்தார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றில் நீதிவான் டிகிரி ஜயதிலக முன்னிலையில் வெலிவேரிய சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிவேரிய சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் 100 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பொதுமக்கள் 100 பேரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 93 இராணுவ சிப்பாய்களின் துப்பாக்கிகளை நாம் கைப்பற்றியுள்ளோம்.அவை அரச இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே ஊடகங்களின் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய எதிர்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
Average Rating