மத்தள சர்வதேச விமான நிலைய சேவையை விஸ்தரிப்பதற்கு அரசு நடவடிக்கை..!!
மத்தல மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவையை விஸ்தரித்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது.
அம்பாந்தோட்டை – மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கை செல்லும் விமானக் கட்டணங்களை குறைத்துள்ளது.
இதேவேளை எமிரேட்ஸ், கல்ஃப் எயார் போன்ற வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களின் விமானங்களை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கவும் அங்கு நிறுத்திவைப்பதற்கான கட்டணங்களையும் அரசாங்கம் 50 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதனைத் தவிர, விமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண காலமும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வெளிநாட்டு விமானங்களிடம் அறவிடப்பட்ட கட்டணங்களில் 50 வீதம் சலுகையளிக்கப்பட்டது. இதற்கிணங்க, இந்தக் கட்டண சலுகையை தொடர்ந்தும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்தல மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த விமான நிலையத்தை, விமானங்களை பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் உத்தேசித்திருந்தமையும் குறிப் பிடத்தக்கது.
Average Rating