தந்தையை கோடாரியால் தாக்கிக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை..!!
75 ஆயிரம் ரூபா பணத்தை வழங்க மறுத்த தந்தையை கோடாரியால் தாக்கி கொலை செய்த மகனுக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் அமென்தா செனவிரட்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். கண்டி அங்கும் புர உக்கலவத்த தோட்டத்தைச் சேர்ந்த கருப்பையா லோக நாதன் (வயது 36) என்பவருக்கே நீதவான் மரண தண்டனையை விதித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினம் ஒன்றில் இரவு இக் கொலைக் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத் தினம் தமது தந்தை வசித்து வரும் மெததும்பர வீட்டிற்குச் சென்று இவர் தந்தையிடம் 75 ஆயிரம் ரூபா பணம் தருமாறு கோரியுள்ளார். தன்னிடம் தற்போது பணம் இல்லை என தெரிவித்து பணம் கொடுக்க தந்தை மறுத்தால் ஆத்திரம் கொண்ட மகன் தந்தையின் வீட்டிலிருந்த கேடாரியால் தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட உடதும்பர பொலிஸார் சந்தேக நபரான இறந்தவரின் மகளை கைது செய்து தெல்தெனியா நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்து வழக்கை தாக்கல் செய்தனர். ஆரம்ப விசாரணைகளை நடத்தியப் பின்னர் இவ் வழக்கு விசாரணைகள் கண்டி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதன் போது சட்ட மா அதிபர் கடுமையான குற்றப் பத்திகை தாக்கல் செய்திருந்தார்.
2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கண்டி மேல் நீதிமன்றத்தில் நீதவான் அமென்த செனவிரட்ன முன்னிலையில் நடைபெற்று வந்த இவ் விசாரணையின் போது மனு தாரர் தரப்பில் ஆறு சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. மனுத்தாரர் தரப்பிலான அரச சட்டத்தரணியும் எதிரி தரப்பிலான சட்டத்தரணியும் தங்களின் இறுதி தொகுப்புரைகளை வழங்கியப் பின்னர் நீதவான் சாட்சியங்களையும் தடயப் பொருட்களையும் கவனத்தில் கொண்ட எதிரியை கொலைக் குற்றவாளியாகக் கண்டு மரணதண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Average Rating