புலனாய்வு பிரிவினரால் சிறிதரன் எம்.பி. விசாரணை..!!
புலனாய்வு பிரிவினரால் சிறிதரன் விசாரணை அச்சுறுத்தும் நடவடிக்கையே இது என சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பிரசன்ன டி அல்விஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகளான திலகரட்ண, உதயகுமார் ஆகியோரால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் வைத்து இன்று காலை 9.35 முதல் 11.30 வரை விசாரணைக்கு உட்டுத்தப்பட்டுள்ளார்.
இதுபற்றி சிறீதரன் எம்.பி கூறுகையில்,
அண்மையில் நான் கனடாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக அரச சார்பு ஊடகங்களில் வெளிவந்திருந்த செய்திகள் தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டது.
நான் கனடா சென்றிருந்த போது, அங்கு இடம்பெற்ற கூட்டமொன்றில், ‘புலிகளை இலங்கையில் மீண்டும் உருவாக்க முடியாது.
எனவே, கனடாவில் அந்த அமைப்பை உருவாக்கி, இலங்கையில் வந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், தமிழ் மக்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் இராணுவத்தினரே அழித்தார்கள் என்றும், சுமார் 200 தமிழ்ப்பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்டுபடுத்தப்பட்டதாகவும் பேசியதாகத் தெரிவித்து, இது தொடர்பாகவே விசாரணைகள் நடைபெற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்தத் தகவல்கள் இலங்கையில் அரச சார்பு ஊடகங்களில் வெளிவந்ததையடுத்தே தாங்கள் இந்த விசாரணைகளை நடத்தியதாகவும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
எனினும் இதுவல்ல உண்மை. வடமாகாண சபை தேர்தலுக்காக நாம் முன்னெடுக்கும் தீவிர தேர்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி எம்மை அச்சுறுத்த மேற்கொள்ளப்பட்டதே இந்த விசாரணை என்று தெரிவித்துள்ளார்.
Average Rating